பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 மார்ச், 2011

புத்தகபூதம் பதில்கள் 12

கேள்வி நவீன கவிதைகளில் எளிமையான கவிதைகள் ஏதுமில்லையா?

ஏனில்லை நிறைய இருக்கிறது அதில் மிகவும் எளிமையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் எழுதக்கூடிய கவிஞர்களில் ஒருவர் சமயவேல் அவருடைய கவிதை ஒன்று இதோ படித்துப்பாருங்கள் இதை எழுதி பல வருடங்கள் ஆகிறது. இவருடைய அரைக் கணத்தின் புத்தகம் என்கிற கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது

பரிணாமப் பயன்பாடுகள்

பெயர் தெரியாத பூச்சி
பருப்பு டப்பாவுக்குள் இருந்தது
அதன் தாய்தந்தை யார் எதுவரை
படித்திருக்கிறது அதன் லட்சியம் என்ன
சாதனை என்ன வீட்டுப் பொறுப்பை
செவ்வனே செய்கிறதா பூர்ஷ்வாவா
கஞ்சா பிடிக்குமா
சமுகப் பிரக்ஞை உண்டா
கல்யாணம் ஆனதா லெபனான்
போர்பற்றி அதன் அபிப்ராயம் என்ன
ஒன்றும் தெரியாது
சாம்பல் நிறத்தில் வரிவரியாக
இத்தினியூண்டு மீசையுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது.

புதன், 2 மார்ச், 2011

புத்தக பூதம் பதில்கள்11

கேள்வி லிமரைக்கூ என்றால் என்ன?

லிமரிக்கும் ஹைக்கூவும் சேர்ந்த ஒரு கலப்பினக் கவிதை வடிவத்தை டெட்பாக்கர் என்பவர் முதன்முதலாக ஆங்கிலத்தில் உருவாக்கினார். ஜப்பானிய ஹைகூவின் 5,7,5 என்னும் அசையமைப்பையுடைய மூவடி எல்லையும் லிமரிக் ஓசை அமைப்பும் கொண்ட அதற்கு லிமரைக்கூ என்று பெயர். இவ்வாறு தமிழின் முதல் ஹைக்கூ நுலான சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் என்ற நுலில் ஈரோடு தமிழன்பன் கூறுகிறார்
அந்த நுலில் இருந்து சில லிமரைக்கூக்கள்

புகைபிடித்தால் இறப்பாய்
மதுகுடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்

பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன்நண்டு வகையே அதிகம்

மந்தை பிரிந்த ஆடு
முகவரி தொலைத்துவிட்டுத் தேடியது
வழியில் வந்தநரி யோடு

தாடி வளர்த்த ஈரோடு
தமிழர் பூமி முழுவதும் பரவி
மாற்றம் செய்தது வேரோடு

ஐயனார் வாளின் ஓரம்
அடடா தொட்டுப் பார்த்தால் நேற்று
பெய்த மழையின் ஈரம்



சனி, 26 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்10

கேள்வி அங்கதமாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்களா

   இப்போதும் அங்கதமாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் குறைந்த எண்ணிக்கையில். அவர்களில் ஒருவர்
பேயோன் என்ற பெயரில் எழுதும் எழுத்தாளர். அவர் யார் என்று இன்னும் தெரியவில்லை ஆனால் தமிழ்இலக்கிய உலகை நன்கறிந்தவர் என்பது மட்டும் உறுதி அவரது சமீபத்திய புத்தகம் திசைகாட்டிப் பறவை அதிலிருந்து சில துளிகள்

சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்து கொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தை எழுத்தாளர் ஆகிவிடப்போகிறார்.

பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை துற்றாதீர்கள் உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் வேலைசெய்கிறார் தெரியாத நண்பர்கள் வேறு இடங்களில் வேலைசெய்கிறார்கள்.


டி.வி விளம்பரங்கள் அனைத்தையும் ஒரு டிவிடியில் அடைக்கவேண்டும்.அடுத்து அந்த டிவிடியை எரிக்கவேண்டும் பிறகு விளம்பரங்களின்றி டிவி பார்க்கலாம்.



தனரேகையை ஆராயும்போது ஆயுள் ரேகை மேல் ஒரு கொசு வந்து அமர்ந்தது.உள்ளங்கையால் நெற்றியில் ஓங்கி ஒரே அடி நெற்றியில் கொசு பொட்டு கவித்துவம்.

தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருடைய வீட்டு குழாயிலும் தண்ணீரை நிறுத்திவிட்டால் தமிழ இலக்கியம் செத்துவிடும் என்கிறார் நண்பர் குலை நடுங்குகிறது


புதன், 23 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்9

கேள்வி  முற்போக்கு இலக்கியம் என்கிறார்களே அது என்ன.?

இந்த சமுதாயம் இப்படியே சாதி,மத,சம்பிராதய,சாத்திர ஏற்றத்தாழ்வுடைய நிலையிலேயே நீடிக்கலாம் என்ற சமுதாயப்பார்வை ஒன்று உண்டு.
இதற்கு நேர் எதிரான பார்வை மற்றொன்று இந்த இரண்டாவது பார்வைதான் முற்போக்கானது. சமுதாய மாற்றம், முன்னேற்றம் என்பதே இன்றிருக்கும் நிலை மாறி, இந்தப்படியிலிருந்து அடுத்த படிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். இந்தப்பார்வைதான் முற்போக்குப்பார்வையாகும் இவ்வாறு சமுதாயத்தை அடுத்தடுத்த மேல்நிலைக்கு எடுத்துச் செல்வதே முற்போக்கு வாதமாகும். சமுதாய்ததைப்பற்றி எல்லா எழுத்தாளனுக்கும் ஒரு பார்வை இருக்கும் யாருடைய பார்வை சமுதாயத்தை முன்னெடுத்து செல்கிறதோ அது முற்போக்கு கண்ணோட்டம் .அதை பிரதிபலிக்கும் இலக்கியம் முற்போக்கு இலக்கியம். என்று ச, செந்தில்நாதன் தன்னுடை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற நுலில் கூறியுள்ளார்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்8

கேள்வி தமிழ்நாட்டில் இப்போது இருப்பது போல ஐயப்பன் வழிபாடு முன்பு பிரபலமாக இல்லை என்கிறார்கள் மூத்த குடிமக்கள் அது எப்போது யாரால் இங்கு பிரபலப்படுத்தப்பட்டது?


அதற்கு பெரும் பங்களிப்பு செய்தவர் பாளையம் பொன்னம்பலம் தியாகராசன் எனும் சர்.வி.டி.ராஜன் ஆவார். பெரும் நிலச்சுவானதாரும் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அதன் சார்பாக அன்றையச் சென்னை மாகாணத்தில் அமைச்சராக இருந்தவரும் சமூக அரசியல் பொருளாதார மற்றும் நீதி முதலிய நிர்வாகத் துறைகளில் மிகுந்த செல்வாக்குடைய சுற்றம் சூழல்களை உடையவருமான இவர், இந்திய விடுதலைக்குப்பிறகு அரசியல் செல்வாக்கை இழந்தார். 1952ல் மதுரை சட்டமன்றதேர்தலில் பொதுவுடமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய பி.இராமமூர்த்தியிடம் தோற்றுப்போன இவர் அதன் பிறகு தன்னுடைய சமய சமூகச் செல்வாக்கினை ஈட்டிக்கொள்ள முனைந்தார்.மதுரை அழகர் மலைக்கு மேலுள்ள அடிவாரத்தில் வைணவ அழகர் கோயில்  சிலம்பாறு எனும் இயற்கையின் நீருற்றுக்கு அருகே பழமுதிர் சோலையும் அதிலே முருகன் வேல்வழிபாட்டையும் முயன்று பிரபல்யப்டுத்திய பி.டி. இராஜன் மதுரையில் 1955 56ல் ஐயப்பன் வழிபாட்டை மக்களிடம் அறிமுகம் செய்தார். அவருடைய முன் முயற்சிகள் காரணமாகக் கட்டுப்பாடான குழுக்கள் மூலமாகத் தெரு தெருவாக ஐயப்பன் படங்கள் பூசைகள் பக்திப்பாடல்கள் கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து, பல ஊர்களில் இந்த வழிபாடு அறிமுகம் செய்யப்பட்டது.   இந்த தகவல் உள்ள புத்தகம் தமிழின் அடையாளம் பக்கம் 95ல் எழுதியவர் சிறந்த ஆய்வார்களில் ஒருவரான தி.சு.நடராசன் அவர்கள்.


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

ஈரேழு உலகங்கள் என அடிக்கடி சொல்கிறார்களே அவை எவை?


இந்து மத புராண கற்பனைகளில் இவையும் ஒன்று இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்குபதில் இதோ
ஆகாயத்தில் உள்ளதாக சொல்லப்படுகின்ற ஏழு உலகங்கள்
யூ
புவ
சுவ
மஹ
ஹந
தப
சத்ய
பூலோகத்தின் அடியில் இருப்பதாக சொல்லப்படுகிற ஏழு உலகங்கள்
அதல
விதல
குதல
ரஸாதல
தாரதல
மகாதல
பாதாள



சனி, 19 பிப்ரவரி, 2011

கொறிக்க கொஞ்சம் கவிதை 2

                                                 சூழல்

என் தாத்தாவின்
புகைப்படத்தில்
தாத்தா அமர
பாட்டி பக்கத்தில்
நின்றிருந்தாள்
என் அம்மாவின்
புகைப்படத்தில்
அப்பாவும் அம்மாவும்
சமமாகவே அருகருகே
உட்கார்ந்திருந்தார்கள்
எங்கள் புகைப்படத்தில்
நாங்கள் இருவருமே
நின்று கொண்டிருக்கிறோம்
மூன்றுமே
சட்டத்திற்குள் தொங்குகின்றன.